Tuesday 5 March 2024

காற்றே வா வா - ஓர் உழுகுடிப் பாட்டு

 



வேளாண்மையில், வாழ்வியலில் நீருக்கு இணையானது காற்று. 

காற்றை வரச்சொல்லி ஓர் உழுகுடி வாழ்வியல் பாட்டு.


பாடலாசிரியர் : சிராப்பள்ளி ப.மாதேவன் 

இசை : இராபர்ட் - முத்துக்குமாரசாமி 

பாடியவர்கள் : ஆகாசு சங்கர், கௌரி, சுவேதா. 

ஒளிப்பதிவு & ஆக்கம் : சிராப்பள்ளி ப.மாதேவன்


தாழக்குடி, ஔவையாரம்மன் கோயில், தோப்பூர், ஆண்டித்தோப்பு,  பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, தேரூர், குறிச்சி, வீரநாராயணமங்கலம், தெள்ளாந்தி முதலிய நாஞ்சில்நாட்டுப் பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்பெற்றது.

=============================


காற்றே வா வா

(கலித்தாழிசை)


தரவு


தாடகை மலை மேலே

தாழஞ் செடி மேலே

நல்ல மணம் தேடும் காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.


தாழிசை 1


கதிர் நிறைந்த வயல் வெளியில்

கதிரவனின் பேரொளியில்

குளிரும் கொண்டோடி வா காற்றே வா

காற்றே வா காற்றே வா


சிறு நெல்லின் காதுகளில்

பருவத்தின் பொன்சேதி

பகரவே ஓடிவா காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.


தாழிசை 2


விளை யாட்டுச் சிறுவர் களின்

விருப்பமேயும் தோட்டத்தில்

ஒருகனி கொய்தோடி வா காற்றே வா

காற்றே வா காற்றே வா


கதிர் அறுக்கும் வாள்முனையில்

கழனிவயக் கரமேட்டில்

களிக்கவே ஓடிவா காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.


தாழிசை 3


தென்குமரி நீர்சுமந்து

தென்னைமரத் தலைநனைக்க

மழையும் கொண்டோடி வா காற்றே வா

காற்றே வா காற்றே வா


பழையாறு நீர்பெருக

பனைமரப் பால் ஊற

முகிலொடு ஓடிவா காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.


தாழிசை 4


கார்காலச் சிறுபொழுதில்

காகங்கள் சிறகுலர்த்த

அழலும்  கொண்டாடி வா காற்றே வா.

காற்றே வா காற்றே வா


விளக்காடும் கார்த்திகையில்

விண்ணாடும் பால்நிலவில்

கமமொடு ஓடிவா காற்றே வா

காற்றே வா காற்றே வா

காற்றே வா காற்றே வா வா.


இணைப்பு :  https://youtu.be/P0X_-MSOcGA


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்