Tuesday, 11 March 2025

இளையராசா பல்லியப் பெருமழை


இசைச்சிறகு அசைத்தசைத்து
இமயச்சிமை கடந்த
இசைச் செருக்கால்,

அன்னக்கிளி தொடங்கி
ஐரோப்பிய இசைமன்றம் வரை,
நுழையும் இடங்களில் எல்லாம்
விதிகளை மாற்றுகிறாய்.

அந்தப்
பல்லியப் பெருமழை நடுவே
உன் குரலில்
மெல்லென நுழைந்த
“இதயம் போகுதே”
எமைச் சில்லிடச் செய்துவிட,

அல்லவை ஒதுக்கி உனை
அள்ளி முகர்ந்திட்டோம்.

நீ,
எம் மண்ணின் குழந்தை!
எம் மக்களின் இறுமாப்பு!

ஆண்டவன் முன்னே
நெடுஞ்சாண் கிடக்கை
இசைகேட்டு மகிழ்ந்தவர் முன்
கூப்பித் தொழுதகை.

கண்களில் தெரிந்தன
கனிவும் நன்றியும்.
முகத்தில் தெரிந்தது;
எங்கள்
மொத்தப் பெருமிதம்.

வாழி நீ! வாழி! வாழி!! 



Sunday, 9 March 2025

முல்லைக்குத் தேர்கொடுத்து…

 


பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.

கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.